வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், நவம்பர் 06, 2013

வலிமிகுதல் 8


முந்திய பகுதியில் ‘தொடர்’களின் வகைகளையும் அவற்றில் வலி மிகும் மிகா இடங்களையும் பார்த்தோம். இனி ‘தொகை’களின் வகைகளையும் அவற்றில் வலிமிகும் மிகா இடங்களையும் பார்ப்போம்.

தொகை என்பது இரண்டு சொற்களுக்கு இடையே தொகையுருபு மறைந்திருப்பதால் நாம் விரித்துப் பொருள் கொள்வதற்கு இடம் தருவது. அது ஆறு வகைப்படும்.

1. வேற்றுமைத் தொகை
2. வினைத் தொகை
3. உவமைத் தொகை
4. பண்புத் தொகை
5. உம்மைத் தொகை
6. அன்மொழித் தொகை

சென்ற பதிவில் ‘தொடர்’ வகைகளில் வேற்றுமைத் தொடரை விளக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறேன். அத்துடன் இந்தப் பதிவிலும் முதல் வகையான வேற்றுமைத் தொகையையும் நிறுத்தி வைக்கிறேன். வேற்றுமைத் தொடரையும் வேற்றுமைத் தொகையையும் சேர்த்துத் தனியாகக் கற்க உள்ளோம். மீதமுள்ளவற்றைப் பார்ப்போம்.

வினைத்தொகை -
ஊறுகாய், சுடுசோறு, ஆடுகளம் - இரண்டு சொல்லில் முதற்சொல் ஏவல் பொருள் தந்து முக்காலத்திற்கும் விரித்துப் பொருள் காணும்படி அமைவது. வலி மிகாது என்பதைத் தெளிவாக அறிவீர்கள்.

உவமைத் தொகை -
தாமரைக்கண், மலைத்தோள், பனிப்பார்வை - முதற்சொல் இரண்டாம் சொல்லுக்கு உவமையாக வந்து இடையில் போன்ற என்ற உவம உருபை இட்டுத் தொகுத்துப் பொருள் காண்பது. வலி மிகும்.

பண்புத் தொகை -
பொய்ப்பேச்சு, மெய்க்கருத்து, கறுப்புக்குதிரை - முதற்சொல் இரண்டாம் சொல்லின் பண்பை விளக்குவதாய் அமைந்து ‘ஆன, ஆகிய’ போன்ற பண்புருவுகளை இட்டுத் தொகுத்துப் பொருள் காணும்படி இருப்பது. வலி மிகும்.

உம்மைத் தொகை -
காடுகரை, குழந்தைகுட்டி, தாய்தந்தை - இரண்டு பெயர்ச்சொற்களோடும் உம் விகுதியைச் சேர்த்துத் தொகுத்துப் பொருள் கொள்வது. வலி மிகாது.

அன்மொழித் தொகை -
துடியிடை தோன்றினாள், எழுகதிர் கிளம்பிற்று - மேற்காணும் எவ்வகைக்குள்ளும் அடங்காமல் தொகுத்துப் பொருள் காண வேண்டியிருப்பது. துடிபோன்ற இடையை உடைய பெண் தோன்றினாள். எழுந்த கதிர் கிழக்கிலிருந்து கிளம்புகிறது. இதில் வலி மிகுவதற்கும் மிகாமைக்கும் இதுவரை கற்ற விதிகளின்படி உரிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளும்படி இருக்கும்.

தொகைகளின் தனித்த குணம் - இரண்டும் வினைச்சொற்கள் என்றால் அவற்றுக்கு இடையே தொகை தோன்றாது.

அடுத்த பகுதியில் இந்தத் தொடரின் க்ளைமாக்ஸ் !

குறிப்பு:
முகநூலில் கவிஞர் மகுடேசுவன் எழுதியது இங்கு பதியப்பட்டுள்ளது.

வலிமிகுதல் 7

வலிமிகுதல் 6

வலிமிகுதல் 5

வலிமிகுதல் 4

வலிமிகுதல் 3

வலிமிகுதல் 2

வலிமிகுதல் 1

கருத்துகள் இல்லை: