வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், மார்ச் 25, 2015

ஆம் ஆத்மி கட்சியும் உட்கட்சி பூசலும்


தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றதும் மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். பாசகவின் தடையற்ற பல சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு கிடைத்த பெரும் தடை மக்களாட்சிக்கு நல்லது. மற்ற எதிர்கட்சிகள் பாசகவை பார்த்து இதன் ஓட்டத்தை எப்படி தடுப்பது என்று செய்வதறியாமல் திகைத்த நேரத்தில் தில்லியில் பாசகவுக்கு பெரும் அடி. இது பாசகவுக்கும் நல்லது என்று தான் கூற வேண்டும்.

இன்னும் சொன்னால் 2014ஆம் ஆண்டின் பாசகவின் வெற்றிப்பயணம் 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.
குல்லா

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி பெருவெற்றி பெற்றதும், யோகேந்திர யாதவும் பிரசாந் பூசணும் கட்சியை சில கேள்விகள் கேட்டார்கள். தேர்தலுக்கு முன்னமே கேட்டுள்ளார்கள் ஆனால் தேர்தலுக்கு பின் தான் அதற்கு மதிப்பு கூடியுள்ளது.  கேட்ட கேள்விகளும் மிகச்சரியானது, ஆனால் அதற்கு ஆம் ஆத்மியின் தில்லி பொறுப்பாளர்கள் அவர்கள் இருவரையும் துரோகிகள் என்றதும் மற்ற நடவடிக்கைகளும் ஆம் ஆத்மியும் மற்ற கட்சிகள் போல் தான் என்று காட்டியது. 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது, இது அக்கட்சியின் பலருக்கு செருக்கை (மமதை) தரும். இப்போது நடக்கும் சண்டையைப் பார்த்தால் பலருக்கு செருக்கு வந்தது போல் தான் தெரிகிறது. மேலும் பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல் வெற்றி பெற்றவர்கள் அடுத்தவர்களை ஈர்ப்பர் புதிதாக வருபவர்களில் சிலரோ பலரோ மோசமான பேர்வழிகளாக இருப்பர். கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது அதனால் நாளாக ஆக கட்சி தன் கொள்கைகளிலிருந்து நழுவாமல் இருக்க கேள்விகள் மூலம் அதை ஒழுங்கு செய்வதே முறை. வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். தவறுகள் ஏற்படலாம் கட்சியினர் கேள்வி கேட்டால் தான் தவறுகளை களைய முடியும். உட்கட்சி குரல் கேட்கப்பட்டு அவர்களுக்கு பதில் அளிக்கவேண்டும். இக்கட்சியாவது கூட்டாட்சி கொள்கையை கடைபிடிக்க வேண்டும். இந்தி கட்சி என்று நினைக்க வைக்கக் கூடாது.

கேள்விகள் கேட்காவிட்டால் தவறு நடக்க வாய்ப்பு அதிகம், எண்ணம் தூய்மையாக இருந்தாலும் கேள்விகள் தேவை. பல ஆண்டுகள் கழித்தும் எண்ணம் மாசு படாமல் இருக்க வேண்டும். தலைவருக்கும் கட்சியின் மற்ற முதன்மையானவர்களுக்கும்

இடுப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

என்று வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியில் உள்ள பலர் மற்ற கட்சிகள் போல் இயங்க ஆசைப்படுகின்றனர் அது மாபெரும் தவறு. இவர்களின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையால் அது டெல்லி கட்சியாகவே இருக்கும். மற்ற மாநிலங்களில் வளர முடியாது. பஞ்சாபில் நாலு மக்களவை உறுப்பினர்களை பெற்றதால் அங்கு பெரிய கட்சியாகலாம். மற்ற மாநிலங்கள்?  மாநில தலைமை வலுப்பெற்றால் மட்டுமே அந்தந்த மாநிலங்களில் வளரமுடியும்.

இங்கு இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும் தில்லி மாநிலம் என்று சொன்னாலும் அது பெரிய மாநகரம் மட்டுமே.  ஆம் ஆத்மிக்கு தில்லி, பஞ்சாப் தவிர மற்ற இடங்களில் பெருநகரங்களில் மட்டுமே சிறிய ஆதரவு உள்ளது.

  • ஆம் ஆத்மி கட்சி எல்லா மாநிலங்களிலும் வளருவது கடினம். ஆம் ஆத்மி என்பது கருத்தாக்கமே இத்கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பல மாநிலங்களில் கட்சி உருவாகலாம், ஆம் ஆத்மி கட்சி அவற்றுடன் கூட்டணி வைக்கலாம். அதாவது கூட்டாட்சி முறையே நல்லது. இக்கட்சியாவது கூட்டாட்சி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
  • கட்சியின் மேல் மட்டத்தலைவர்கள் அனைவரும் இந்திக்காரர்களே. இந்தி பேசாத பெருவாரியான மாநிலங்களில் வளர அம்மாநில மொழி பேசும் ஆளுமைகள் தேவை. அனைவருக்கும் குறிப்பிட்ட மாநிலத்தின் நிலைமையோ அது எதிர்கொள்ளும் சிக்கல்களோ புரிவது கடினம். ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு என்று சொன்னால் மிகையல்ல. உறுதியான மாநில தலைமை இங்கு தான் தேவைப்படுகிறது. 
  • கட்சி இப்போது பெருநகரங்களில் ஆதரவை கொண்டுள்ளது. ஊரகப்பகுதியில் கட்சி வளருவது அந்த மாநில கட்சியினரின் செயல்பாட்டை பொருத்தே உள்ளது. பஞ்சாபில் வளர்ந்து வருவதும் அங்கு பெறப்போகும் வெற்றியும் மற்ற மாநிலத்தவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும். (என்னைப் பொருத்த அளவில் தில்லி வெற்றியை விட பஞ்சாபில் பெறப்போகும் வெற்றியே, அளவில் பெரிய ஊரகங்களை உடைய மாநிலங்களுக்கு பெரும் ஊக்கத்தை தரும்)
  • கட்சியின் மேல்மட்டக்குழுவில் மாநிலங்களுக்கு சிறப்பு தரப்பட வேண்டும். அவர்கள் சொல்வது கேட்கப்பட்டு முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 
  • மாநில கட்சி நிலவரங்களை மேல் மட்டம் தீர்மானிக்கக்கூடாது (மற்ற தேசிய கட்சிகளைப்போல). 
  • கட்சி செயற்குழு பொதுக்குழு கூட்டங்களில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். (இதைத்தான் பிரசாந்தும் யோகேந்திராவும் சொன்னார்கள்)
  • மாநில அளவு கட்சிக்கு தேசிய கட்சி உதவ வேண்டும் அவர்கள் செல்லுவது தவறு என்றால் அறிவுறுத்தவேண்டும்.

ஆம் ஆத்மியிடம் எனக்கு பிடிக்காதது குல்லா தான். குல்லாவை கண்டாலே ஒவ்வாமை வருகிறது. வடமாநிலங்களில் குல்லா சரி. தமிழ்நாட்டுக்கு?? குல்லா, தில்லி கட்சி இங்கே ஆதிக்கம் செலுத்த வருகிறதோ என்ற அச்சத்தை தரும். தமிழ்நாட்டுக்கு குல்லா பயன்படுத்தினால் கட்சி மக்களிடம் நெருக்கமாக முடியாது.  தமிழகத்தில் குல்லா செயற்கையாக இருக்கும்.\ இருக்கிறது. குல்லாவிற்கு பதில் துண்டு பயன்படுத்தலாம்.



திங்கள், மார்ச் 09, 2015

கிரண் பேடியின் முகமூடி

தில்லியில் தோற்றுவிட்டாலும் அவரைப்பற்றிய பிம்பம் நம் உள்ளத்தில் தவறாக பதியப்பட்டுள்ளது என்பதால் இக்கட்டுரை. தேர்தலோடு இக்கட்டுரையை தொடர்பு படுத்தி பார்க்க வேண்டாம் ஆனால் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அவர் முன்நிறுத்தப்பட்டதால் தான் அவரை பற்றி தெரிந்தது. (தில்லி தேர்தலுக்கு முன்பு எழுத ஆரம்பித்து இப்போது தான் முடித்தேன் அவ்வளவு வேகம்)

கிரண் பேடி தில்லியின் கன்னாகட்டு பிளேசில்அனுமதியற்ற இடத்தில் நிறுத்தியிருந்த பிரதமர் இந்திரா காந்தி பயணம் செய்யும் மகிழுந்தை இழுத்து சென்றார் அதனால் அடுத்த நாளே பழிவாங்கப்பட்டு கோவாவுக்கு மாற்றப்பட்டார் என்று அறிந்திருந்தோம். இதையெல்லாம் கூறியது கிரண் பேடி என்ற கிரண் கேடி தான். தன்னைப் பற்றி இப்படியான உருவகத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். ஊடகங்களும் அதையே இத்தனை நாளும் வெளியிட்டன.

மேற்கண்ட செய்தியை ஏப்ரல் மாதம் 2010இல் போபாலில்  சமூக அறிவியல் பள்ளி மாணவர்களிடம் அவர்களின் இசுபெக்ட்ரம் 2010 நிகழ்ச்சியில் உரையாற்றும் போதும் கூறியுள்ளார்.


ஆனால் இப்போது தான் தெரிகிறது அவர் ஒன்றும் செய்யவில்லை போக்குவரத்து துணை ஆய்வாளர் நிர்மல் சிங் என்பவர் முறையற்ற முறையில் நிறுத்தியிருந்த மகிழுந்துக்கு அபராதம் விதித்தார் என்பது.  அச்சமயத்தில் இந்திரா காந்தி வெளிநாட்டில் இருந்தார். அதுவும் அது பிரதமர் பயணம் செய்யும் மகிழுந்து அல்ல அது பிரதமர் அலுவலக மகிழுந்து (DHI 1817). அங்கு வேலை செய்த யாரோ பயன்படுத்தியுள்ளார்கள். அம்மகிழுந்துக்கு தேவையான பொருட்களை அங்குள்ள கடையில் வாங்க நிறுத்தியுள்ளார்கள்.   அதனால் அக்கடைக்கு நிர்மல் சிங் தண்டம் விதித்து சீட்டு கொடுத்துள்ளார். அக்கடையின் பாதுகாவலர் இது பிரதமர் அலுவலக மகிழுந்து என்று கூறியும் தண்டம் விதித்தார் நிர்மல் சிங். நேர்மையான அதிகாரி நிர்மல் சிங்கிற்கு கிடைக்க வேண்டிய புகழை இத்தனை காலமும் அனுபவதித்து வந்துள்ளார். இதுல கொடுமை என்னன்னா உண்மையான செய்தி கிரண் பேடியின் பக்கத்தில் உள்ளது ஆனால் எல்லோரும் அப்பக்கத்தை பார்க்காமல் கிரண் பேடி கூறியதையே நம்பினர். கிரண் பேடி கூட அவர் பக்கத்தை பார்க்காத போது அடுத்தவர்கள் பார்க்கனும் என்பது சரியல்ல :). இப்போது இவர் தளம் மீளமைக்கப்பட்டதால் பழைய செய்தி கண்ணுக்கு தட்டுப்படவில்லை. இப்போது இவர் கடையில் டீ போடுகிறார்கள். நடக்கட்டும்.

இது நடந்தது ஆகத்து 1982இல். கிரண் பேடி கோவாவுக்கு மாற்றப்பட்டது 1983 மார்ச்சில். கோவாவில் பணியிலிருந்த இவர் விடுப்பு கடிதம் கொடுத்து விட்டு (விடுப்பு ஏற்படவில்லை) தில்லிக்கு ஓடி வந்துவிட்டார்.
மகளுக்கு உடல் நிலை மோசமடைந்ததால் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு உடனடியாக தில்லி வந்தார். நிருவாக ரீதியாக அதாவது சட்டப்படி இது தவறு என்றாலும் உணர்வு வழியில் இது சரி. ஆனால் இதற்கு நேர்மாறாக மிசோரமில் நடந்தார்.

காங்கிரசு அரசு இவரை பழிவாங்கும் விதமாக நடந்துகொண்டதால் தான் இவருக்கு பாசக மேல் அன்பு பொங்குகியது என்பதும் வடிகட்டிய பொய். இவருக்கு காங்கிரசு அரசாங்கம் இக்கட்டான நேரங்களில் உதவியுள்ளது. இவர் முறையற்ற முறையில் வழக்கறிஞர்கள் மேல் தடியடி நடத்தியதை அது பற்றி விசாரித்த விசாரணை ஆணையமும் (வாத்வா ஆணையம்) கண்டித்துள்ளது. குற்றம் செய்த வழக்கறிஞரை தண்டித்தது சரி என்றும் ஆனால் எல்லா வழக்கறிஞர்கள் மேலும் தடியடி நடத்தியது தவறு என்றும் கூறியது. இவருக்கு தில்லியில் பெரிய பதவி தரக்கூடாது என்றும் அது கூறியது. இவரை மாற்ற வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை இராசீவ் காந்தியின் அரசில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த பூட்டா சிங் மறுத்துவிட்டார். இவருக்கு பாசக மேல் அன்பு பொங்கியது தவறில்லை அதற்கு காங்கிரசு அரசு பழிவாங்கும் விதமாக நடந்துகொண்டது தான் காரணம் என்பது இவருக்கு அழகல்ல.

1992ஆம் ஆண்டு மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட இவர் தன் மகளுக்கு அம்மாநில ஒதுக்கீட்டில் டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்றார். சட்டப்படி இதில் தவறு இல்லை என்றாலும் அவ்வொதுக்கீடு மிசோரம் மாநில மலை வாழ் மக்களுக்கானது. சட்டத்தின் ஓட்டையை தனக்காக பயன்படுத்தினார்.  மிசோரம் மாநில தலைமைச் செயலரும் அம்மாநில ஒதுக்கீட்டில் கிரண் பேடி தன் மகளுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் தவறில்லை என்றாலும் பொது நலன் கருதி அவ்வொதுக்கீட்டை பயன்படுத்தாமல் மிசோரம் மக்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை பேடி ஏற்றுக்கொள்ளவில்லை. மிசோரம் இடவொதுக்கிடை இவர் பயன்படுத்தியதால் மிசோராமில் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  மிசோரம் அரசும் இவர் மிசோரமில் இருப்பது ஆபத்து என்றும் இவருக்கும் இவர் குடும்பத்தாருக்கும் 24 மணிநேரமும் பாதுகாப்பு தருவது இயலாத செயல் என்றும் இவருக்கு எதிராக குற்றம் நடக்கலாம் என்று கூறியதால் அம்மாநில நிருவாகத்தின் அறிவுரைப்படி அங்கிருந்து வந்துவிட்டார்.